Tuesday, January 10, 2012

சல்மான் ருஷ்டியின் இந்தியா வருகை தொடர்பில் சர்ச்சை

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 10 ஜனவரி, 2012 - 16:17 ஜிஎம்டி

சல்மான் ருஷ்டி
சல்மான் ருஷ்டி
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 20-ம் தேதி நடைபெறும் இலக்கிய விழாவில் பங்கேற்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் ருஷ்டியின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று இஸ்லாமிய மதப்பள்ளியான தாருல் உலூம் தியோபந்தின் துணைவேந்தர் அப்துல் காஸிம் நுமானி கோரிக்கை விடுத்து, இந்தச் சர்ச்சையைக் கிளப்பினார். சில அரசியல் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
கடந்த 1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய ஒரு நாவலில், இஸ்லாமியர்களைப் புண்படுத்தியிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராக, இரானின் மதத் தலைவரான அயதொல்லா கொமெனி ஃபத்வா உத்தரவைப் பிறப்பித்தார். இந்தியாவும் கூட அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது.
அதன் பிறகு, சல்மான் ருஷ்டி பலமுறை இந்தியா வந்துள்ளார். ஆனால், இப்போதுதான் சர்ச்சை எழு்நதுள்ளது.
இப்போது இந்தப் பிரச்சினையைக் கிளப்ப என்ன காரணம் என மெளலானா அப்துல் காஸிம் நுமானியிடம் கேட்டபோது, ''இந்த ஓராண்டுக்குள் நான் துணைவேந்தராகப் பதவியேற்ற பிறகு, சல்மான் ருஷ்டி வருவதை ஊடகங்கள் மூலம் அறிந்து அவரது விசாவை ரத்து செய்யக் கோரினேன். அதற்கு முன்பு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. தேர்தலுக்காக இதைச் செய்யவில்லை’’, என்றார் மெளலானா அப்துல் காஸிம் நுமானி.
இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான வில்லியம் டால்ரிம்பிள் கூறும்போது, ''ருஷ்டி இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியிருப்பவர். அவருக்கு விசா தேவையில்லை. அவர் பலமுறை ஜெய்பூர் வந்திருக்கிறார். தனது பேச்சால், பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியிருக்கிறார். ஒருமுறை கூட அவருக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை’’, என்றார் வில்லியம் டால்ரிம்பிள்.
இது மத்திய அரசு தொடர்பான பிரச்சினை என்பதால் அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரஷித் ஆல்வி தெரிவித்தார்.
ஆனால், இந்தப் பிரச்சினை முழுக்க முழுக்க காங்கிரஸ் கட்சியால் நடத்தப்படும் நாடகம் என பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாரமான் புகார் கூறுகிறார்.
ஆனால் ருஷ்டி வருகைக்கு ஆட்சேபம் தெரிப்பவர்கள் சட்டப்படித்தான் அதனை அணுக வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யக் கூடாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷீத் கூறினார்.

நன்றி B.B.C

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.